மட்டக்களப்பு பெரியகல்லாறு பாலத்தில் நவீன கண்காணிப்பு கமராக்கள்
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் அதி நவீன கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு இன்று (18) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி. அபேயவிக்கிரமவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா, மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருனாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயரத்ன உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்துள்ளனர்.
பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கண்காணிப்புக் கமராக்கள் மூலம், மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பயணிக்கும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு வாகனங்களில் தப்பிச் செல்பவர்களையும், இலகுவான முறையில் அடையாளம் காண முடியும் என இதன்போது கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.