வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தனது சம்பள நிலுவை ரூ. 2,675,816.48 சுகாதார அமைச்சுக்கு மீள கையளிப்பு
இலங்கையின் அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக, குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு விசேட வைத்திய நிபுணர் ஷாபி ஷிஹாப்தீன் தனது சம்பள நிலுவைத் தொகையான ரூ. 2,675,816.48 (ரூ. 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 மற்றும் 48 சதம்) தொகையினை சுகாதார அமைச்சுக்கு மீள கையளித்துள்ளார்.
பெண்களுக்கு குழந்தை பிறக்காத வண்ணம், மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பலோப்பியன் குழாய்களை சேதப்படுத்தியதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகையத் தொடர்ந்து, அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்மற்றவை என அறிவித்த நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்திருந்தது.
இந்நிலையில் வைத்திய நிபுணர் ஷாபி ஷிஹாப்தீன் பணி இடைநிறுத்தம் மேற்கொண்டமை காரணமாக நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது.
வைத்தியர் ஷாபிக்கு உரித்தான சம்பள நிலுவைத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் உள்ளடங்கிய ரூ. 2,675,816.48 (ரூ. 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 மற்றும் 48 சதம்) தொகை காசோலை சுகாதார அமைச்சினால் வைத்தியர் ஷாபிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் சுகாதார அமைச்சிற்கு திரும்ப வழங்க வைத்தியர் ஷாபி முடிவு செய்துள்ளார்.
இலங்கையில் கடும் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக குறித்த சம்பள பாக்கியை சேர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.