மின்சாரம் தாக்கி 4 பிள்ளைகளின் தாய் மரணம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா உம்மா என்பவரே இன்று (16) காலை 5.30 மணியளவில் இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த தகர கொட்டிலுக்கு மேலாக சென்ற மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட மரணமடைந்த பெண்ணின் உடல் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்