பாடசாலைகளை மூட தீர்மானம் – கல்வி அமைச்சு
இலங்கை கல்வி அமைச்சு கொழும்பு மற்றும் அண்டிய நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இவ்வாரம் இன்று ஜூன் 20 முதல் 24 வரை மூட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரதான நகரங்கள் அல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் உகந்த தீர்மானத்தை எடுக்க, மேல் மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் இணையவழியில் நேற்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இன்று திங்கட்கிழமை (20) முதல் வெள்ளிக்கிழமை (24) வரையான வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, மாகாணக் கல்விப் பணிப்பாளர்களால் வலய மற்றும் பிரிவுக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி
போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களை பாதிக்காத வகையில், பிரதேச மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை நடாத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனுமொரு பாடசாலைக்கு செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் பாடசாலையை நடாத்த முடியுமானால், வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடாத்தப்பட்ட போதிலும், ஒரு குறிப்பிட்ட மாணவர்களால் அதில் பங்கேற்க முடியாமல் போனால், அந்த மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்பிக்கும் வசதிகள் இருந்தால் அந்த முறையைப் பயன்படுத்த முடியும்.
மேல் மாகாணத்தில் கொழும்பு வலயத்திலும் அதனை அண்டிய நகரங்களிலும், ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களிலும் இவ்வாரம் பாடசாலைகளை நடத்தாதிருத்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
பிரதான நகரங்கள் அல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் உகந்த தீர்மானத்தை எடுக்க, மேல் மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வாரநாட்களில் ஒன்லைன் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை மின்சாரத்தை துண்டிக்காதிருக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணங்கியுள்ளது.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்னார்வமாக மேற்கொள்ளும் பணியை கல்வி அமைச்சு பாராட்டுவதுடன், அதனை அவ்வாறு கருத்தில் கொண்டு செயற்படுமாறு மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் தொடர்பான முடிவு, இவ்வாரத்தில் நடைபெறும் செயன்முறையை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (25) மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.