சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்குச் செல்ல முயன்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 பேரில் 8 சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் சனிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார்
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 13 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து வெள்ளிக்கிழமை (05) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னாரில் இருந்து தொலைவில் உள்ள 6 ஆம் மணல் திட்டில் படகோட்டியினால் இறக்கி விடப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) அதிகாலை அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் உள்ளடங்களாக 13 பேர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சனிக்கிழமை (06) மதியம் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் 8 நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஏனைய 5 சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் ஊடாக உரிய பாதுகாவலரிடம் ஒப்படைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.