மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொவிட19 டெல்டா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணி இந்தத் கொரோனா தொற்றில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றைக்குமுன் தினம் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதி 21 நாட்களுக்குப் பின்னதாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 44 தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 34 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக குறித்த இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.