இந்தியா – சீனா 14வது சுற்று பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்தியா, சீனா இடையே ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற 14-வதுசுற்று பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்குலடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி இருதரப்பு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த மோதலுக்குப் பிறகு எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியதால் பதற்றம் அதிகரித்தது. பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் நிலையில் இதுவரை 13 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பும் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வீரர்களை வாபஸ் பெற்றன. எனினும் மேலும் சில பகுதிகளில் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. தற்போது லடாக்கின் பான்காங் ஏரியில் சீன ராணுவம் புதிதாக பாலம் கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 14-வது சுற்று பேச்சுவார்த்தை 12-ம் தேதி நடைபெற்றது. இந்தியா தரப்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தாவும் சீன தரப்பில் ஜின்ஜியாங் பிராந்திய மேஜர் ஜெனரல் யாங் லின்னும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின்போது, பான்காங் ஏரியில் பாலம் கட்டப்படுவதற்கு இந்தியாதரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோங்கா லா அருகே கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து வீரர்களை பின்வாங்கச் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.
மேலும் டெப்சாங் பல்ஜ் மற்றும் சார்டிங் நுல்லா இணைப்பு பகுதியில் ரோந்துசெல்வதற்கான உரிமை குறித்தும் பிரச்சினை எழுப்பப்பட்டது. ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும், லடாக் மோதலுக்கு இருதரப்பும் ஏற்கக்கூடிய தீர்வை எட்டுவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.(இந்து)