முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கிருமி நீக்கும் இயந்திரங்கள் வழங்கல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு 21இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் நேற்று (15) மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கரிடம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கையளித்தார்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ஜேசு ரெஜினோல்ட் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, வைத்திய அதிகாரிகளான சோபன், விதுரன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.