கிழக்கு மாகாணத்தில் சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

கிழக்கு மாகாணத்தில் பரவலாக அதிகரித்துவரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முகக்கவசம், முகத்திரை, பி.பி.ஈ. பாதுகாப்பு அங்கிகள், தொற்று நீக்கி (சனிடைசர்), உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கொண்ட பொதிகளை சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் இதன்போது வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம் சி மாஹிர் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.