![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/gota-e1638541070748.jpg)
இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, ‘பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் (03) தீர்மானித்துள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ், இந்த மையம் செயற்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, தேசிய சேதனப் பசளை மற்றும் விநியோக நிறுவனமாகச் செயற்படுத்துதல், தரமான தின்ம மற்றும் திரவ சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவித்தல், உரிய நேரகாலத்துக்குள் விவசாயிகளுக்கு உரத்தை வழங்குதல், மாவட்ட ரீதியில் உரத் தேவையைப் பூர்த்தி செய்தல், நெல், சோளம் மற்றும் ஏனைய தானியங்கள், மரக்கறி மற்றும் பழ உற்பத்திகளை மேம்படுத்தல்,
பசுமை விவசாயத்துக்கு பொருத்தமானதும் தரமானதுமான விதைகள் மற்றும் கன்றுகளை உருவாக்குவதை ஊக்குவித்தல், விவசாயப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ் மட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்தல், உணவுப் பயிர்களை விநியோகித்தல், சேதன உணவுப் பயன்பாடு தொடர்பாக சுகாதாரக் கல்வி மற்றும் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு இந்த மையம் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று, ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.
காலநிலை மாற்றங்களுக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை சமூகப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் இலங்கையின் நோக்கத்துக்காகப் பயணிக்கவென ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகள் இரண்டுடன், அவசியமான தொடர்பாடல்களை மேற்கொள்வதும் இந்நிலையத்தின் கடமையாகும்.
ஜனாதிபதி அவர்களுடன், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய பசுமை பொருளாதாரச் சபையை (National Green Economy Council) ஏற்பாடு செய்வதற்கு அவசியமான திட்டத்தை வகுப்பதும், இந்தப் பசுமை விவசாய மையத்தின் பொறுப்பாகும்.